Showing posts with label லெனின். Show all posts
Showing posts with label லெனின். Show all posts

Wednesday, January 20, 2021

மாமேதை லெனின்

லெனின் தனது கடைசி தலைமறைவு வாழ்வை 1917 செப்டம்பர் - அக்டொபர் காலகட்டத்தில் பெட்ரோகிராட்டில் விபோர்க்ஸ்கயா ஸ்டொரோனாவில் உள்ள எனது வீட்டில் கழித்தார். அது நான்கு தளங்கள் கொண்ட ஒரு குடியிருப்பு. இப்போது அது லெனின் அருங்காட்சியகமாக உள்ளது.
அவரது ஒரு நாளுக்கான வேலை திட்டத்தை பேசும் போது முதல் வேலையாக அவர் எனக்கு சொன்னது இதுதான்: அன்றைய நாளின் அனைத்து நாளிதழ்களும் 9 அல்லது 10 மணிக்குள்ளாக எனக்கு வந்து விட வேண்டும். அதற்கு முன்பாகவே கிடைக்கும் எனில் என் அறையின் கதவின் கீழ் இடைவெளியில் தள்ளி விடுங்கள்.

அத்தனை நாளிதழ்களையும் அவர் எப்படி வாசித்து முடிக்கின்றார் என்பது ஆச்சரியம் மிகுந்த ஒன்று. ஒரு ஆயுதக் கிளர்ச்சிக்கான தலைமை தாங்கும் பொறுப்பில் இருந்ததால் மிக முக்கிய முடிவுகளை எடுக்கும் பணியில் அவர் ஈடுபட்டு இருந்தார்.

எனது உணவு அறையின் வலது மூலையில் ஜன்னலில் புத்தக அலமாரியின் அருகே எனது எழுத்து மேசை இருக்கிறது. பெரிதும் விவசாயம் தொடர்பான நூல்கள் அடங்கிய ஒரு சிறு நூலகம் என்னுடையது. வெகு விரைவிலேயே எனது நூல்களின் தொகுப்பை புரிந்து கொண்ட லெனின் அவை குறித்து என்னுடன் உரையாடத் தொடங்கினார். பள்ளி செல்லும் சிறுமியான என் மகளின் மேசையைத்தான் அவர் பயன்படுத்தி வந்தார். விரைவிலேயே எனது பல நூல்கள் அவர் மேசைக்கு இடம் பெயர்ந்தன.

நிகோலாயேவிச் போக்தானோவ் என்ற ஒரு குறிப்பிட்ட எழுத்தாளர் மீது லெனினின் கவனம் குவிந்தது. இவர் ஒரு விலங்கியல் அறிஞர். 1800களில் வாழ்ந்தவர். விலங்கியல் மட்டுமின்றி ரஷ்ய கிராமங்கள், விலங்குகள் குறித்த கதைகளையும் சித்திரங்களையும் அவர் தீட்டி இருந்தார். அவரது மறைவுக்குப் பின் அவர் நண்பர் பேராசிரியர் N.Vagner என்பவர் அவர் கட்டுரைகளை தொகுத்து From Russian Wildlife என்று நூலாக வெளியிட்டார்.

"போக்தானோவ் என் ஊர்க்காரர். நான் பிறந்தது சிம்பிர்ஸ்க் என்ற ஊரில். அவரும் நானும் ஒரே உடற்பயிற்சி பள்ளிக்குத்தான் சென்றிருக்கின்றோம். ஆனால் அவர் பட்டம் பெற்றது காசான் பல்கலைக்கழகத்தில். நான் வேறு பல்கலைக்கழகத்தில்...".

From Russian Wildlife என்ற அந்த நூலை பல முறை அவர் விரும்பி வாசித்தார். மிகுந்த புலமையுடன் எழுதப்பட்ட நூலின் பக்கங்களை எனக்கு சத்தமாய் வாசித்தும் காண்பித்தார். "மிக அகன்று பரந்த மத்திய ரஷ்யாவின் வெளிகளிலும் உக்ரைனின் ஸ்டெப்பி புல்வெளிகளிலும் வோல்கா நதியின் மேலுமாக" பறந்து திரிந்த சிறிய வெள்ளை ஆந்தையை பேசும் DEEP IN THE FOREST என்ற பகுதியை ரசித்து வாசித்தார்.  "அடர் காட்டின் சொந்தக்கார சீமாட்டியான" சிவிங்கிப்பூனையை ரசித்து வாசித்தார். "குட்டிப் பறவைகள் ஏன் கவலையில் ஆழ்ந்துள்ளன" என்ற கதை நான்கு அல்லது ஐந்து பக்கங்கள் மட்டுமே ஆனது, ஆனால் இக்கதையை தொடக்கம் முதல் முடிவு வரை பல முறை சத்தமாக வாசித்தார்.

The Little Starling என்ற புத்தகம் அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று. காரணம் இப்புத்தகம் அவரது ஊரான சிம்பிர்ஸ்க் பற்றியும் அவரது குழந்தைப் பருவத் த்தையும்   இளமைப் பருவத்தையும் ஞாபகப்படுத்தியதாம்.

போக்தோனோவின் மற்றோரு புத்தகமான Nature's Spongers ஒட்டுண்ணிகள் பற்றி சொல்கிறது. இத்தகைய விலங்குகளும் பூச்சிகளும் எப்படி பிற உயிர்களை சார்ந்து 'உழைக்காமல்' வாழ்கின்ற ன, குறிப்பாக விவசாயத்தை எப்படி பாழாக்குகின்றன என்று விரிவாக சொல்கிறார். நூலின் தலைப்பை லெனின் வெகுவாக ரசித்தார். மிகப் பொருத்தமான தலைப்பு என்று வியந்தார். "இயற்கையின் ஒட்டுண்ணி"களை சரியான முறையில் கையாளும் கலை சோசலிச அரசுக்கு மட்டுமே கை கூடும் என்றார். "நாம் ஆட்சிக்கு வருவோம், உடன் இயற்கை யின் எதிரிகளுக்கு எதிராக தாக்குதல் தொடுப்போம்" என்று சொல்கிறார்.

அக்டொபர் புரட்சிக்கு முன்பு இந்நூல் 18 முறை மறுபதிப்பு கண்டது. 1923இல் 19ஆவது மறுபதிப்பு. இந்நூல் மறுபதிப்பு செய்யப்பட வேண்டும் என அரசுப் பதிப்புத்துறைக்கு ஆலோசனை சொன்னது யார் என்று எனக்கு தெரியாது, ஆனால் இதில் லெனினின் பங்கு இருக்கும் என்பது உறுதி.

V.N.சுகசேவ் எழுதிய Swamps(சதுப்பு நிலம்) என்ற நூல். மேய்ச்சல் நில வேளாண்மை குறித்த படிப்புக்கு இந்நூல் பாடமாக இருந்தது. இது நான் வாசித்துக் கொண்டிருந்த நூல், உணவறை மேசையில் வைத்திருந்தேன். ஒரு நாள் லெனின் என்னிடம் சொன்னார், "தெரியுமா, அந்த நூல் சுவாரஸ்யமான ஒன்று, படித்து முடித்து விட்டேன்!  மிகப்பல சிந்தனைகளை உள்ளடக்கிய நூல். எழுதிய முறையோ மிக அற்புதம்! வாசிப்பவரை வசீகரிக்கும் வண்ணம் எழுதியுள்ளார். சதுப்பு நிலங்கள் உண்மையில் பெரிய அளவு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவை. நம் தாய் நாடான ரஷ்யாவில் என்ன நடக்கிறது, பாருங்களேன், மிகப் பரந்த அளவுக்கு நம் நாட்டில் சதுப்பு நிலங்கள் உள்ளன, உண்மையில் இவை யாவும் இயற்கையான கரிச்சுரங்கங்கள், மிக மலிவான எரிபொருள் கிடங்குகள், இவற்றைக் கொண்டு செலவு பிடிக்காத மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்..."  பிற்காலத்தில் தோழர் கிரிசிஜானோவ்ஸ்கி சொன்னதை இங்கே நினைவு கூர்வோம்: "1919 டிசம்பர், லெனின் சொன்னார், கரியைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தி செய்வதற்கான சாத்தியம் மிக அதிகம். அத்தகைய வெப்பத்தை உற்பத்தி செய்யக்கூடிய கரி நம் நிலங்களில் அபரிமிதமாக உள்ளது, வெட்டி எடுப்பதும் அவ்வளவு செலவு பிடிக்க கூடியது அல்ல".

இந்நூல் பற்றி அவருடன் உரையாடும்போது வேட்டையாடுவதில் அவருக்கு அலாதி பிரியம் என்பதை கண்டுகொண்டேன். "ஒரு சதுப்பு நிலம், உங்களிடம் ஒரு துப்பாக்கி, உங்களின் இலக்குக்காக நீங்கள் காத்திருக்கின்றீர்கள்....ஆகா! என்ன ஒரு அனுபவம்!".

இந்த நூலை அவர் தன் மேசையில் வைத்திருந்தார். ரஷ்யாவின் சதுப்பு நிலங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்ற சிந்தனை அவரை விட்டு நீங்கவே இல்லை என்பதை நான் நன்றாக உணர்ந்தேன். எங்கள் உரையாடல்களில் இது பற்றி பல முறை பேசலானார்.

நான்காவது நூல் The New Earth (புதிய பூமி).  William S Hardwood   என்பவர் அமெரிக்காவின் நவீன விவசாயம் குறித்து எழுதிய நூல் இது.

ஒரு நாள் இரவு உணவுக்கு பின்னான உரையாடலின் போது நூல் அலமாரியின் அருகே நின்று கொண்டு என்னுடன் பேசினார்: உங்கள் நூலகத்தில் ஒரு அற்புதமான நூலை கண்டெடு த்தேன். அடடா! சும்மா சொல்லக்கூடாது! நூலின் அளவும் கச்சிதம், உங்கள் பாக்கெட்டில் போட்டுக்கொள்ள லாம். நாம் ஆட்சிக்கு வரும்போது இந்நூலை நிச்சயமாக மறுபதிப்பு செய்வோம். விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் இந்நூலைப் பற்றி அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இந்நூலில் ஆசிரியர் சொல்லும் ஆலோசனைகள், அவர் வைக்கும் வாதங்கள் ஆகியவற்றை விவசாயத்தொழிலில் ஈடுபடும் அனைவரும் மட்டுமின்றி வேளாண் விஞ்ஞானிகள், இயற்கை விஞ்ஞானிகள் ஆகியோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

1918. சோவியத் அரசு நிர்வாகம் மாஸ்கோவுக்கு இடம் பெயர்ந்தது. லெனின் என்னை தொலைபேசியில் அழைத்தார், புதிய பூமி என்ற அந்த நூல் என்னிடம் இருந்தால் க்ரெம்ளினுக்கு அனுப்ப முடியுமா என்று கேட்டார். பேராசிரியர் திமிர்யாசேவ் என்பவருக்கு நூலை அனுப்பி வாசிக்குமாறு வேண்டியதுடன் நூலுக்கு முன்னுரை ஒன்று எழுதுமாறும் பணித்தார். நூலை மிக விரைவில் வெளியிட வேண்டும் என்றும் கூறினார். பேராசிரியர் நூலுக்கு முன்னுரை எழுதியதுடன் நூலின் தலைப்பை Regenerated Land என்றும் மாற்றினார். 1919இன் முற்பகுதியில் நூல் வெளியானது.

நூலின் இரண்டு பிரதிகளை லெனின் எனக்கு அனுப்பியிருந்தார். இந்நூலின் பல பிரதிகளை அவர் எப்போதும் தன் மேசை மீது அடுக்கி வைத்திருப்பார். தன்னைக் காண வருபவர்களிடம், குறிப்பாக விவசாயத் தொழிலின் முன்னோடிகளிடம் நூலின் முக்கியத்துவம் குறித்துப்பேசி நூலை மிகப் பரவலாக கொண்டு செல்ல வலியுறுத்துவார்.

லெனினுடன் வேறு பல நூல்கள் குறித்தும் உரையாடி இருக்கின்றோம். நீங்கள் லெனினுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தால், அது மிகக் குறைந்த நேரமே என்றாலும் நீங்கள் புதிய சில விசயங்களை தெரிந்து கொள்வீர்கள். அவர் பிறரைப் போல் இல்லை, அவருடன் உரையாடுபவரை கவனமாக கேட்பார், உரையாடுபவரின் கேள்விகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார், உரையாடலில் தொடர்பான பல புது விஷயங்களை சேர்த்து உரையாடலை செழுமைப் படுத்துவார்.
-மார்க்கரிடா ஃபோபானோவா
Lenin And Books, 1971ஆம் ஆண்டுப் பதிப்பில் ( Progress Publishers) இருந்து எடுக்கப்பட்ட கட்டுரை.
தமிழில்: மு இக்பால் அகமது
Iqbalahamed Iqbal 
லெனின் நினைவு நாள் இன்று (21.01.1924)

மாமேதை லெனின் நினைவு தினம் ஜன 21

அதிபரைச் சந்திக்க  க்ரெம்லின் மாளிகையில் முக்கிய அதிகாரிகளும் அரசியல் பொறுப்பில் இருந்தவர்களும் வெகுநேரம் காத்துக் கொண்டிருந்தார்கள்..
ஆனால் அவரோ இரண்டு மணி நேரமாக யாரோ ஒருவரோடு பேரார்வத்துடன் உரையாடியபடி குறிப்புகளும் எடுத்துக் கொண்டிருந்தார்..
அவரோடு பேசிக் கொண்டிருப்பவர் மிக முக்கிய நபர் என்று காத்திருந்தவர்கள் அனைவரும் யூகித்துக் கொண்டனர்.. 

உரையாடல் முடிந்து வெளியே வந்தது  கசங்கிய உடையுடன் காட்சி அளித்த ஒரு குலாக்(விவசாயி).. அவ்விவசாயியை ஆதுர தழுவி அனுப்பிவிட்டு காத்திருந்தவர்களை சந்திக்க துவங்கினார் அவர்...

அதே தலைவரைத்தான் பின்னொருநாளில் H G Wells சென்று சந்தித்தார்..அவருடனும் அதே பேரார்வத்துடன் உரையாடி பத்து ஆண்டுகளுக்குள் தன் நாட்டின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்து விடுவதாகச் சொல்லி  அதிர்ச்சி அளித்தவர்... 
அவ்வாறே செய்தும் காட்டியவர்...

கண்டதும் சுட்டுத்தள்ள அரசு உத்தரவிட்டிருந்த காலத்திலும் பின்லாந்து பாதிரியார் உடையணிந்து நகர காவல் ஆணையரின் வீட்டிலேயே ஒளிந்து தங்கிக்கொண்டே புரட்சியை முன்னெடுத்த சாகசக்காரரும் கூட ..

தான் ரகசியமாய் புகை வண்டியில் பயணம் மேற்கொண்ட போது சுற்றிச் சூழ்ந்து கொண்ட காவலர்களின் கண்களில் தப்பி அதே புகைவண்டியில் கரி தள்ளுபவனாக  உருமாறி தப்பிக்கும் அளவிற்கு அந்த புகைவண்டி தொழிலாளிகளின் மனதையும் வென்றவர்..

பக்கத்து நாடுகளில் ராட்சச கொசுக்கள் கடிக்கும் வனாந்தரங்களில் தங்கியபடியே வெட்டுபட்ட மரங்களை மேசையாகக் கொண்டு அவர் எழுதிய கட்டுரைகள், அறிக்கைகளை அவர் துவக்கிய பத்திரிக்கையான இஸ்க்ரா(தீப்பொறி), மூலம் நாடு கடத்தி தன் நாட்டிலே அக்கினி குஞ்சுகளாய் பற்ற வைத்தவர்...

தான் அதிபரானபின்பு ஒரு பெண்ணால் சுடபட்டு மயங்கி விழும் வேளையிலும் அப்பெண்ணை பாதுகாக்குமாறு சொல்லிவிட்டு மருத்துவமனை சென்றவர்...

மக்ஸிம் கார்க்கி போன்ற இலக்கிய படைப்பாளிகள் இன்றி தன் தேசம் புரட்சியை சாதிக்க முடியாது என்பதை வெளிப்படையாக சொன்ன அந்த தலைவர்தான் டால்ஸ்டாயையும்  உள்வாங்கிக் கொண்டவர்...

இத்தனை புரட்சிகர நடவடிக்கைகளுக்கும் ஊடாக குருப்ஸ்கயா என்ற பெண்ணோடு காதல் வயப்பட்டு, கொடுங்குளிர் சைபீரியச் சிறையில் அடைக்கப்பட்டபோது, அவள் தன் தாயோடு பன்றி இறைச்சி கொழுக்கட்டைகளை மடியில் சுமந்து தன்னை சந்தித்து செல்லுமளவிற்கு அப்பெண்ணோடு காதல் தீயை வளர்த்தவர்.. 

ஒரு சாதாரண நம்மூர் தாலுகா அளவிலான கல்வி அதிகாரியின் மகனாகப் பிறந்து அறிவார்ந்த கனிவான தாய், கண்டிப்பான தந்தையின் கீழ் வளர்ந்து தன் பால பருவத்திலேயே தன் உடன் பிறந்த அண்ணன் ஒரு தீவிரவாத இயக்கத்தோடு  தொடர்பில் இருந்தான் என்பதற்காக தன் தெரு அருகே உள்ள மின் கம்பத்தில் அரசால் தூக்கிலிடப்பட்டதை கண்ணுற்ற துர் வாய்ப்பு பெற்றவர்..

அத்தலைவன்தான், பேரரசன் ஜார் அவன் மனைவி ஜாரினி, அவளுடைய ரகசிய நண்பன் ரஸ்புடின் என்னும் மதகுரு ஆகியோர்கள் பெரும் நிலக்கிழார்களான ரசாக்குகளோடு சேர்ந்து  ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் மீது காட்டிய அதிகார வெறியாட்டத்தை வேரறுத்தவர்...

ஜாரெனும் பேரரக்கன் அலறி வீழ்ந்தான்... ஆஹாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி என்ற நம் பாரதியின் செவ்விய வரிகளின் நாயகன்தான் அவர்...

விளாதிமிர் உல்லியனோவ் இலீச் லெனின்...

அவரின் நினைவு நாள் இன்று...

Lakshmi RS பதிவில்

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...